விடுதலைப்புலிகள் அழிந்தாலும் தமிழீழ கோட்பாடு அழியவில்லை: இராணுவ தளபதி
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட்ட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்ட போதும், தமிழீழ கோட்பாடு இன்னும் அழியவில்லை என இலங்கையின் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவத்தின் தலைமைத் தளபதி ஜகத் ஜயசூரிய, இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள கல்லடி, தொப்பிகல, வாகரை, புனானை இராணுவ முகாம்களுக்கு கடந்த வாரம் விஜயம் செய்திருந்தார்.
அப்போது அவர் இராணுவ வீரர்கள் மத்தியில் பேசுகையில்,
விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர்களும், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களும் இன்னமும் தமிழீழம் குறித்து விவாதித்து வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு, மே மாதம் நடைபெற்ற இறுதிக் கட்டப் போரில் விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்ட போதிலும், தமிழீழம் குறித்த அவர்களது கனவு கலையவில்லை.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தற்போது கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவதற்காகவே இராணுவ வீரர்கள் பெருமளவில் நிறுத்தப்பட்டுள்ளனர். போரிடுவதற்காக அல்ல. நமது நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பு இராணுவத்துக்கு உள்ளது. ஏதாவது ஒரு குழுவினர் மீண்டும் ஆயுதம் ஏந்திப் போராடத் துணிந்தால், அதையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
நன்றி: தமிழ்வின்
Basel 16 Feb 2010
<<வாசலுக்கு