தமிழ் தேசிய கூட்டமைப்பினால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனமானது இலங்கை சிங்களத்தலைமைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. குறிப்பாக தமிழீழ விடுதலைப்புலிகளின் நிழல் பிரதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இயங்குகின்றதென்ற குற்றச்சாட்டு இலங்கை அரசினால் சுமத்தப்பட்டு அது இந்தியாவின் அங்கீகாரத்துக்கு செல்ல வாய்ப்புண்டு.
இந்தியாவானது இலங்கையின் குற்றச்சாட்டுக்கு கோடி காட்டுமானால், இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஏற்பட்ட நிலைதான் தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தில் கையொப்பமிட்ட தலைமைகளுக்கும் ஏற்பட இடமுண்டு.
இந்த நிலையில் சர்வதேசம் தனது விஸ்வரூபத்தை தமிழ்மக்களுக்கு சார்பாக காட்ட முயலலாம். இதன்போது புலம் பெயர்ந்த மக்கள் இலங்கை அரசின் அராஜக அடக்கு முறைக்கு எதிரான நிலையை எப்படி எடுக்க வேண்டுமென இப்போதே ஆயத்த நிலையில் இருப்பது நல்லதென தோன்றுகிறது. அதற்கான ஒத்திகைகளை மக்கள் மத்தியில் நடைமுறைப் படுத்திப் பார்ப்பது சிறப்பானது.
வேறுபட்ட பல காரணங்களுக்காக பிளவுபட்டு நிற்கும் புலம்பெயர் மக்கள் இந்த கணமே ஒன்றுபடுதல் அவசியம். எம்மவர்களுக்குள்ளே ஒரே கொள்கையுடன் வேறுபட்ட துருவங்களாகி பனிப்போர் நடாத்திக்கொண்டிருக்கும் புலம்பெயர் மக்கள், கடந்தகால சிதைவுகளை முன்னிறுத்தி தமிழீழ நகர்வுக்காக உடனடியாக ஒன்றுபட்டு ஈழமக்களின் தீர்வை நோக்கி நகரல் வேண்டும்.
நினையா பிரகாரமாக இலங்கையில் எதுவும் எப்போதும் நடைபெறலாம். மின்னாமல் முழங்காமல் வருகின்ற மழைக்கு ஒப்பானது மகிந்த கொம்பனியின் கட்டளைகள். இதனால் வெகு ஜாக்கிரதையாக காய் நகர்த்துவதற்கு புலம்பெயர் புத்திஜீவிகள் தங்களை ஆயத்தப்படுத்தல் அவசியமாகும்.
ஏனெனில்,
'எதிர்வரும் காலங்களில் போராட்ட வடிவம் புலம்பெயர் மக்களிடையே விடப்பட்டுள்ளது' என்ற தலைவரின் கருத்துக்கு உண்மை வடிவம் கொடுக்கப்படும் காலம் நெருங்கிவிட்டதென்பதே ஜதார்த்தம்.
மலையூர் பண்ணாகத்தான்